திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே தனியார் கல்லூரி - பள்ளி வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் இருந்த மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள கூத்தூரில் செயல்படும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீரங்கத்தில் இருந்து 50 மாணவர்களுடன் கூத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை கண்ணன் என்பவர் ஓட்டி வந்தார்.
பேருந்து ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பாலத்தில் இறங்கும்போது அதன்வேகம் அதிகமாக இருந்துள்ளது. வயது முதிர்வு காரணமாக ஓட்டுநர் கண்ணனால் பேருந்து ஓட்டத்தை கட்டுப்படுத்த இயலவில்லை.
இதையும் படிக்க | கடலூரில் விழிப்புணர்வு பேரணிக்காக காத்திருந்த 3 மாணவிகள் மயக்கம்
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் ஓரத்தில் இருந்த ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் மீது மோதியதுடன் நில்லாமல் எதிரே வந்த மற்றொரு தனியார் பள்ளி வேன் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், 2 மாணவி, ஒரு மாணவன் மற்றும் பொதுமக்கள் என 10-க்கும் மேற்பட்டோருக்கு காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தால் திருவானைக்காவல் ஸ்ரீரங்கம் பிரதான சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது.
இது குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.