கடந்த ஆட்சியில் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை திமுக ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்தை, பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு, பத்திரப்பதிவுதுறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, 'கலைஞர் நூலக கட்டுமானப் பணிகள் அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் முடிவடையும். உள்கட்டமைப்புப் பணிகள் முடிந்த பின்னர் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும்.
கடந்த ஆட்சியின்போது சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக விவசாயிகளை, பொதுமக்களை நேரில் அழைத்துப் பேச வேண்டும், குறைகளைத் தீர்க்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் கூறினோம். அது சட்டப்பேரவைக் குறிப்பிலே உள்ளது.
பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்றுதான் கூறினோமே தவிர திட்டத்தை ஆதரிக்கவோ எதிர்க்கவோ இல்லை.
எட்டு வழிச்சாலை திட்டம் என்பது ஒரு கொள்கை முடிவு. அதுபற்றி அமைச்சர் முடிவு எடுக்க முடியாது. இத்திட்டத்தை செயல்படுத்துவதா, இல்லையா என தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்கும்' என்றார்.