மதுரையில் 'பொதிகை எக்ஸ்பிரஸ்' ரயில் என்ஜின் தடம் புரண்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை - செங்கோட்டை இடையே செல்லும் 'பொதிகை எக்ஸ்பிரஸ்' ரயில் மதுரை வரை மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு மதுரையில் டீசல் என்ஜின் மாற்றப்படுவது வழக்கம்.
அதுபோல இன்று(புதன்கிழமை) அதிகாலை என்ஜின் மாற்றம் நடைபெற்றது. பொதிகை எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து வழக்கமான நேரத்திற்கு புறப்பட்டுச் சென்றது.
இந்த ரயிலில் இருந்து கழற்றப்பட்ட மின்சார என்ஜின் பின்புறமாக பார்சல் ஆபிஸ் அருகே நிறுத்தச் சென்றபோது அதன் மூன்று சக்கரங்கள் தடம் புரண்டன. தடம் புரண்ட எஞ்ஜினை சரி செய்வதற்காக காலை 7.25 மணி முதல் 20 நிமிடத்திற்கு பாதுகாப்பிற்காக மின்பாதையில் உள்ள மின்சாரம் நிறுத்தப்பட்டது.
என்ஜின் தடம் புரண்டதால் திண்டுக்கல் மார்க்கத்தில் செல்ல வேண்டிய ரயில்கள் சிறிது காலதாமதமாக புறப்பட்டுச் சென்றன.
மதுரை - செகந்திராபாத் சிறப்பு ரயில் ஒரு மணி நேரமும், வைகை எக்ஸ்பிரஸ் 10 நிமிடமும், பழனி சிறப்பு ரயில் 9 நிமிடமும், தேனி சிறப்பு ரயில் 32 நிமிடங்களும் மதுரையிலிருந்து கால தாமதமாக புறப்பட்டன. தடம் புரண்ட ரயில் என்ஜின் காலை 7.35 மணிக்கு சரி செய்யப்பட்டது.
இதனால் மதுரை ரயில் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.i
இதையும் படிக்க | சினூக் ஹெலிகாப்டர்கள் நிறுத்தம்: விளக்கம் கேட்ட இந்திய விமானப்படை!