அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு கோயிலில் லட்சதீபம் ஏற்றப்பட்டது. இதனால் கோயில் வளாகம் முழுவதும் விளக்குகளால் ஜொலித்தது .
தமிழ் மாதம் தோறும் திருவிழாக்கள் நடைபெற்று வரும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில், கார்த்திகை உற்சவ விழா கடந்த 1- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது .
இதனைத் தொடர்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் பஞ்சமூர்த்திகள் கோவில் வளாகத்தில் உள்ள ஆடி வீதிகளில் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தனர் .
இந்நிலையில், இன்று திருக்கார்த்திகையை முன்னிட்டு ஆலயம் முழுவதும் லட்சதீபம் ஏற்றப்படும் நிகழ்வு நடைபெற்றது .
இதில், கோயில் பணியாளர்கள் பக்த சபையினர் மற்றும் பக்தர்கள் என ஏராளமானோர் பங்கேற்று பொற்றாமரைக்குளம், அம்மன், சுவாமி சன்னதிகள் உள்ளிட்ட ஆலயம் முழுவதும் அகல்விளக்குகள் மூலம் லட்சதீபங்களை ஏற்றினர்.
இதனால் கோயில் வளாகம் முழுவதும் விளக்கொளியில் ஜொலித்தது. தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர், பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி கீழமாசிவீதி, தேரடி அருகே எழுந்தருள அங்கு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.