தமிழக-கர்நாடகம் எல்லையில் துப்பாக்கிச் சூடு: வேட்டைக்காரர் ஒருவரை பிடித்து விசாரணை!

தமிழக-கர்நாடகம் எல்லையில் துப்பாக்கிச் சூடு  நடத்தி வேட்டைக்காரர் ஒருவரை தமிழக வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மேட்டூர்: தமிழக-கர்நாடகம் எல்லையில் துப்பாக்கிச் சூடு  நடத்தி வேட்டைக்காரர் ஒருவரை தமிழக வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சேலம் மாவட்டம் மேட்டூர் காவல் உட்கோட்டம் கொளத்தூர் காவல் நிலைய எல்லையில் புதன்கிழமை அதிகாலையில் ஈரோடு மாவட்டம் பர்கூர் வனப்பகுதியில் சொரக்காமடுவு என்ற இடத்தில் துப்பாக்கியுடன் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த ஈரோடு மாவட்ட வனக்காப்பாளர் சுதாகர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஏழு பேர் புதன்கிழமை அதிகாலை அப்பகுதிக்கு சென்றனர்.

அங்கு கோவிந்தப்பாடியைச் சேர்ந்த ராஜா (எ)காரவடையான், காமராஜ், குமார், செட்டி பட்டியைச் சேர்ந்த பச்சைக் கண்ணன், தர்மபுரி மாவட்டம் ஆத்து மேட்டூர் சேர்ந்த ரவி ஆகியோர் இரண்டு துப்பாக்கிகளுடன் மான்களை வேட்டையாடிக் கொண்டிருந்தனர். இவர்களைக் கண்டதும் வனத்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.

வனத்துறையினரை கண்டதும் வேட்டைக்காரர்கள் தப்பி ஓடினார்கள். அப்போது கோவிந்தபாடியை சேர்ந்த குமார் என்பவரை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். பிடிபட்ட குமாரை ஈரோடு மாவட்டம் கொமராயனூரில் உள்ள சென்னம்பட்டி வனச்சரக அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் திங்கள்கிழமை கர்நாடகம் வனப்பகுதியில் உள்ள மத்திய மரத்தூர் என்ற இடத்தில் வன விலங்குகளை வேட்டையாடி உள்ளது தெரிய வந்துள்ளது. இரு மாநில எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்தி வேட்டைக்காரர் ஒருவரை வனத்துறையினர் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com