
பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டி 800 கி.மீ. நடைபயணத்தை தொடங்கிய அகில இந்திய காந்திய மக்கள் இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளர் ம. கருப்பையா.
திருச்சி: பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டி மதுரையைச் சேர்ந்த ம. கருப்பையா (52) திருச்சியிலிருந்து 800 கி.மீ. நடைபயணத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினார்.
அகில இந்திய காந்திய மக்கள் இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரான இவர், கடந்த 33 ஆண்டுகளாக தேச நலனுக்காவே பல்வேறு சமூக சேவைகளை ஆற்றி வருகிறார். மிதி வண்டி பயணம், நடைபயணம் என நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 98 ஆயிரத்து 600 கி.மீ. பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். இவரது மனைவியான சித்ரா கருப்பையாவும் தன் வாழ்நாள் முழுவதும் கணவருடன் பயணம் மேற்கொண்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் பயணத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தனி ஒருவராக தனது பணியை மேற்கொண்டு வருகிறார் கருப்பையா.
திருச்சியிலிருந்து 2023 ஆம் ஆண்டு முழுவதும் தமிழகத்தை வலம் வரும் வகையில் 800 கி.மீ. தொலைவு நடைபயணத்தை தொடங்கியுள்ளார். திருச்சி கோட்டை பகுதியில் உள்ள காந்திசிலை முன்பு தொடங்கிய இந்த நடைபயணத்தை, திருச்சி வடக்கு சர்வோதய சங்கச் செயலரும், தேச பக்தருமான என். சுப்பிரமணியன், மூவர்ணக் கொடியை அசைத்து தொடங்கி வைத்தார். சர்வோதய சங்க ஊழியர்களும், தேச பக்தர்களும் வாழ்த்தி வழியனுப்பினர்.