தமிழகத்தில் திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் (டிச.12,13) பெரும்பாலான இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிப்பில், தென்மேற்கு வங்கக்கடலில் வெள்ளிக்கிழமை நிலை கொண்டிருந்த ‘மாணடஸ்’ புயல், சனிக்கிழமை அதிகாலை மாமல்லபுரத்துக்கு அருகே கரையைக் கடந்தது. அது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்து, இது மேலும் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகக் கூடும். இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் அநேக இடங்களிலும், புதன்கிழமை ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதையும் படிக்க | குஜராத் முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி... ஓபிஎஸ் பங்கேற்கிறார்?
ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
மேலும், லட்சத்தீவு பகுதிகள், கேரளா, கா்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் டிச.12, 13 ஆம் தேதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம் என கூறியுள்ளார்.