ஆவடி: காவல் துறையில் பணியாற்றிய டோனி என்ற டாபர்மேன்(மோப்ப நாய்) உடல்நலக்குறைவு காரணமாக இறந்தது. ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அஞ்சலி செலுத்தினார்.
டோனி 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி பிறந்து 45 நாள்கள் ஆன நிலையில் மோப்ப நாய் பிரிவில் சேர்க்கப்பட்டு, ஒரு சிறந்த துப்பறிவாளராக பணியாற்றியது.
மேலும், கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகள் உள்பட 35 வழக்குகளில் விசாரணைக்கு உதவியாக பணியாற்றியது டோனி.
2017 ஆம் ஆண்டு மாநில அளவிலான காவல் துறையின் திறன் போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றது. 2020 இல் அடையாற்றில் நடைபெற்ற கெனல்கிளப் மீட்டில் இரண்டாம் இடத்தை பிடித்தது.
சென்னை மாநகர காவல் மோப்ப நாய் பிரிவில் மூத்த உறுப்பினர்கலில் ஒன்றான டோனி, சென்னை மாநகர காவலில் இருந்து பிரித்து கடந்த மே மாதம் ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள மோப்ப நாய் பிரிவில் சேர்க்கப்பட்டது.
இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணாக டோனி ஞாயிற்றுக்கிழமை இறந்தது.
காவல் துறையில் சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி உடல்நலக் குறைவால் இறந்த டோனிக்கு ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும், ஆவடி காவல் ஆணையரக அதிகாரிகள், டோனியின் பயிற்சியாளர் தனசேகர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இறந்த டோனியின் உடல் முழு அரசு மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.