அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.
காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு - வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 3 நாள்களில் வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுவதால் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில் இயல்பைவிட 16 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கடந்த அக். 1-ஆம் தேதி தொடங்கியது முதல் தற்போது வரை 856 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழைக் காலத்தில் இயல்பான மழை அளவு 736 மி.மீ.
மாண்டஸ் புயல் வீசுவதற்கு முன்பாக, இயல்பான மழை அளவை விட 3 சதவீதம் குறைவாக இருந்தது. ஆனால் தற்போது இயல்பைவிட 16 சதவீதம் அதிகரித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.