கம்பம்: முல்லை பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு, வியாழக்கிழமை அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையில் வியாழக்கிழமை நீர்மட்டம் 141.40 அடி உயரமாக இருந்தது, (மொத்த உயரம் 152 அடி), அணையில் நீர் இருப்பு 7,504 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 2,105 கன அடியாகவும் இருந்தது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் விநாடிக்கு 1,100 கன அடியாக வெளியேற்றப்பட்டது.
41 நாள்களுக்கு பின்
கடந்த நவ.4 முதல் அணையிலிருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் விநாடிக்கு, 511 கனஅடியாக திறந்து விடப்பட்டிருந்தது. அதன் பின்னர், 42ஆவது நாளான வியாழக்கிழமை தண்ணீர் திறப்பு அதிகரித்து, விநாடிக்கு 1,100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
அதிகரித்த மின் உற்பத்தி
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் விநாடிக்கு கடந்த 41 நாள்களாக விநாடிக்கு 511 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் ஒரு மின்னாக்கி மூலம் 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது தண்ணீர் அதிகமாக வெளியேற்றப்பட்டதால் அதன் மூலம் 3 மின்னாக்கிகளில் தலா 35,34,30 என மொத்தம் 99 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தொடங்கியது.