ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தனின் இலங்கை கடவுச்சீட்டை, சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் அவரிடமே திருப்பி வழங்கியது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்த சிபிஐ அதிகாரிகள், அதை சென்னை அமர்வு நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர். இந்த வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் மத்திய சிறையில் சாந்தன் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருந்த நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்து கடந்த நவம்பர் 11-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
முன்னதாக, நீதிமன்றத்தில் உள்ள தனது கடவுச்சீட்டு 1995-ஆம் ஆண்டு காலாவதியாகி விட்டது. அதை புதுப்பிப்பதற்காக, திரும்ப தரக் கோரி சாந்தன் தரப்பில் சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி தங்க மாரியப்பன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. திருச்சி முகாமில் இருந்து, போலீஸ் பாதுகாப்புடன் சாந்தன் அழைத்து வரப்பட்டு, நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது நீதிபதி, சாந்தனின் அடையாளங்களை சரிபார்த்த பின், கடவுச்சீட்டை திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சாந்தனின் கடவுச்சீட்டு அவரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.