தஞ்சாவூர்: ராமநாதபுரத்தில் காணாமல்போன இளம் பெண் தஞ்சை மாவட்டத்தில் எலும்புக் கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். கொலை நடந்து நான்கு மாதத்திற்குப் பிறகு காதலனும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் வாத்தியநேத்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் உடையார். விவசாயத் தொழிலாளி. இவரது மகள் வாசகி (25). எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இந்நிலையில் வாசகியை காணவில்லை என கீழத்தூவல் காவல் நிலையத்தில் அவரது தந்தை புகார் அளித்துள்ளார்.இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் வாசகி குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் வாசகி அதே பகுதியைச் சேர்ந்த மாதவன் (25) என்பவரை காதலித்து வந்ததாக தெரிய வந்தது. இதனையடுத்து மாதவனை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார்.
மாதவனும் - வாசகியும் காதலித்து வந்த நிலையில், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். இதனால் வாசகி கர்ப்பம் அடைந்துள்ளார். இதனையடுத்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மாதவனை வாசகி கட்டாயப்படுத்தி உள்ளார். ஆனால் தொடர்ந்து வாசகியை சந்திக்காமல் அவரது தொடர்பை துண்டித்துள்ளார்.
இந்நிலையில் மாதவன் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே ஆடுகளை கிடா போடும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாசகி தான் கர்ப்பமாக இருப்பதை பெற்றோர்களுக்கு தெரிந்துவிடும் என்கிற பயத்தால் கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி மாதவன் வேலை செய்யும் செங்கிபட்டிக்கு வந்துள்ளார். அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாதவனை அவர் வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாதவன், தனது சகோதரர் திருக்கண்ணனுடன் இணைந்து செங்கிப்பட்டி அருகே ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு குட்டையில் வாசகியே நீரில் அமுக்கி கொலை செய்து, அந்த குளத்திலேயே அவரது உடலை போட்டு சென்றதாக காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இருவரும் கூறிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அங்கு வாசுகி எலும்புக்கூட்டை மட்டுமே மீட்டனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் வாசுதியின் உடலை நாய் - நரிகள் தின்று குதறி இருக்கலாம் என காவல்துறையினர் கூறினர்.
மேலும் வாசகியின் மண்டை ஓடு, எலும்புக்கூடு, தலைமுடி, ஆடை ஆகியவற்றை சேகரித்து ஆய்வுக்காக தடவியல் துறைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக சகோதரர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.