சென்னை: உலகின் பல்வேறு பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
மத்திய அரசின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்த 37 பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ராண்டம் முறையில், விமான நிலையத்தில் வந்திறங்கும் சர்வதேச பயணிகள் 2 சதவீதம் பேரை கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தும் பணிகளும் தமிழகம் முழுவதும் தொடங்கியிருக்கிறது.
இப்பணிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் பி. செந்தில்குமார் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அது மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்களும் திறக்கப்பட்டுள்ளன.
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகம் எந்தவிதமான பேரிடரையும் சந்திக்கத் தயாராகவே உள்ளது. மொத்தமுள்ள 1.25 லட்சம் படுக்கை வசதிகளில் அரசு மருத்துவமனையில் மட்டும் 72,000 படுக்கைகள் தயாராக உள்ளன. தமிழகம் முழுவதும் கரோனா வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆக்ஸிஜன் மற்றும் மருந்துப் பொருள்களும் மூன்று மாதங்களுக்குத் தேவையான அளவுக்கு கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.