தலித் குடியிருப்பு குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலப்பு!

புதுக்கோட்டை அருகே தலித் குடியிருப்பிலுள்ள குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்திருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தலித் குடியிருப்பு குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலப்பு!
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே தலித் குடியிருப்பிலுள்ள குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்திருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முத்துக்காடு ஊராட்சியைச் சேர்ந்தது வேங்கைவயல். சுமார் 30 தலித் குடும்பங்களின் குடியிருப்புகளைக் கொண்டது இந்த கிராமம்.

இங்கு வசிக்கும் சிறார்களுக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்தச் சிறார்களின் பெற்றோர்களிடம், சிறார்கள் குடித்த தண்ணீரில் ஏதேனும் கலப்பு இருந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சந்தேகமடைந்த மக்கள், தங்கள் குடியிருப்புக்குள் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மேல் ஏறி திங்கள்கிழமை பார்த்துள்ளனர். அதில், மனிதக் கழிவு மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தகவலறிந்து கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் (மார்க்சிஸ்ட்) எம். சின்னதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன், ஊராட்சித் தலைவர் எம். பத்மா மற்றும் வெள்ளனூர் காவல்துறையினரும் அங்கு வந்து பார்வையிட்டனர்.

வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மர்ம நபர்கள் மனிதக் கழிவுகளை கலந்துள்ளது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சித் தலைவர் எம். பத்மா அளித்த புகாரின்பேரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உடனடியாக தொட்டியிலிருந்த குடிநீர் முழுவதும் அகற்றப்பட்டு, தொட்டி கழுவப்பட்டு புதிதாக தண்ணீர் ஏற்றப்பட்டது.

பல ஆண்டுகளாக குடிநீர் வசதியின்றி  இருந்த இந்தக் குடியிருப்பு மக்களுக்கு நீண்ட போராட்டத்துக்குப் பிறகு 2016-17ஆம் ஆண்டில் தான் பிரத்யேகமாக குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டது.

தொட்டியின் மேலுள்ள மூடியைத் திறப்பது பெரியவர்களால் மட்டுமே முடியும், விளையாட்டுத் தனமாக சிறுவர்கள் யாரும் செய்திருக்க வாய்ப்பில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை விசாரணையின் முடிவில்தான் இந்தச் செயலை செய்தது யார் என்பது தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com