சீர்காழி: சீர்காழி அருகே 18 ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாளையொட்டி திருமுல்லைவாசல், மடவா மேடு, பழையார் மீனவ கிராமத்தில் உள்ள சுனாமி நினைவு தூணுக்கு 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம் தலைமையில் ஊர்வலமாக வந்து மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாட்டில் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி ஆழிப்பேரலை என்கின்ற சுனாமியால் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அவ்வாறு உயிரிழந்தவர்கள் நினைவாக டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமி நினைவு நாள் கடைபிடிக்கப்படுகிறது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 66 பேர். சுனாமி ஏற்பட்டு 18 ஆண்டுகளைக் கடந்தும் அதனுடைய பாதிப்புகளை மீனவர்கள் இதுவரை மறக்க முடியாமல் இருந்து வருகின்றனர்.
பலரது வாழ்க்கை நொடிபொழுதில் மாறிபோனது. அத்தகைய சுனாமி நினைவு நாள் இன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
இன்று 18 ஆம் ஆண்டு சுனாமி நினைவுநாளையொட்டி, சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராம மீனவர்கள் திருமுல்லைவாசல் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து நினைவுத் தூண் வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம் தலைமையில் ஊர்வலமாக சென்று திருமுல்லைவாசல் கடற்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூணுவுக்கு மலர்வளையங்கள் வைத்து மலர்கள் தூவினர்.
அதைத்தொடர்ந்து, நினைவுத் தூண் அருகில் இறந்தவர்கள் நினைவாக வைக்கப்பட்டிருந்த செங்கற்களுக்கு மலர்களைத் தூவினர். அங்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இந்த ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர்
இதேபோல் பழையார், கூழையார், தொடுவாய், பூம்புகார் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் பேரலையால் இறந்தவர்களுக்கு 1000க்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தினர்.