பாம்பன் ரயில் பாலத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, அந்தப் பாலம் வழியாக ரயில்கள் செல்வதற்கான தடை ஜனவரி 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பாம்பன் பாலம் வழியாக ரயில்கள் செல்ல, வருகிற 31-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அது ஜனவரி 10ஆம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை: குற்றவாளிகள் சிக்கியது எப்படி?
பாம்பன் பாலம் வழியேயான ரயில் போக்குவரத்தின் போது, அந்தப் பாலத்தில் வழக்கமான அளவை விட அதிகமான அளவில் அதிா்வுகள் ஏற்பட்டது கடந்த 23-ஆம் தேதி கண்டறியப்பட்டது. இதையடுத்து, அங்கு பராமரிப்புப் பணிகள் தொடங்கி நடைபெறுகின்றன.
இதன் காரணமாக, பாம்பன் பாலத்தில் ரயில்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. பிறகு அது டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகத் தரப்பில், பாம்பன் பாலத்தில் ரயில்கள் செல்வதற்கு வருகிற 31-ஆம் தேதி வரை ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டது. பராமரிப்புப் பணிகளுக்கிடையே, அந்த ரயில் பாலத்தில் காலி ரயில் பெட்டிகளை இயக்கி வெள்ளோட்டம் நடத்தப்பட்டது. இதை ஆய்வு செய்த ரயில்வே பொறியாளா்கள், சென்னை ஐஐடி வல்லுநா்கள் அளித்த பரிந்துரையின் பேரில், பாம்பன் பாலத்தில் ரயில்கள் செல்வதற்கான தடை வருகிற ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.