லதா மங்கேஷ்கர் மறைவு: தலைவர்கள் இரங்கல்

பிரபல பின்னணி பாடகர் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். 
லதா மங்கேஷ்கர் மறைவு: தலைவர்கள் இரங்கல்
Published on
Updated on
1 min read

பிரபல பின்னணி பாடகர் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். 
கே.எஸ்.அழகிரி: இந்தியாவின் பெருமையை தமது குரல் வளத்தால் உலக அரங்கில் உயர்த்திய திருமதி லதா மங்கேஷ்கர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இவரது மறைவால் இந்திய மக்கள் அனைவரும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். லதா மங்கேஷ்கர் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு, எண்ணில் அடங்கா ரசிகர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
வைகோ: கானக்குயில் லதா மங்கேஷ்கர் இன்று நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவரது இனிய குரல் அடங்கி விடாது. காற்றில், விண்வெளியில் கலந்து இருக்கின்ற அந்தக் குரல் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும், அடுத்தடுத்த தலைமுறைகளையும் கவரும்...அவர்களது நெஞ்சங்களில் ஊடுருவிப் பாயும் என்பது திண்ணம். திசை தெரியாத வாழ்க்கையில், இசைக்குயிலாக இடம் பிடித்து இருப்பவர் லதா மங்கேஷ்கர் ஆவார். இசைக்குயில் லதா மங்கேஷ்கர் புகழ், ஏழிசையாய், இசைப்பயனாய், என்றென்றும் நிலைத்து இருக்கும்.
சு.திருநாவுக்கரசர்: பழம் பெரும் பிரபல பாடகி  லதா மங்கேஷ்கர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இயற்கை எய்தினார் எனும் செய்தி அறிந்து துயருற்றேன்.  அன்னாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், அவரது ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சரத்குமார்: இந்திய திரைப்படத்துறையின் மூத்த பாடகியும், மெல்லிசை கானத்தின் அரசியுமான லதா மங்கேஷ்கர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தகவல் பேரதிர்ச்சியும், பெரும் மன வேதனையும் அளிக்கிறது. ரசிகர்களை நீங்கா துயரில் ஆழ்த்தி, இந்திய மண்ணை விட்டு அவர் மறைந்தாலும், அம்மையாரின் குரல் காற்றில் கரைந்தாலும், இவ்வுலகத்தில் விட்டுச் சென்ற பாடல்கள் வாயிலாக என்றும் ரசிகர்கள் மனதில் நினைவுகளாக வாழ்ந்திருப்பார்.
ஜி.கே.வாசன்: நம் நாட்டின் மிகப்புகழ் பெற்ற பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது. கலைத்துறைக்காக, பாடல்களை பாடுவதற்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர். அவரது இழப்பு கலைத்துறைக்கும், இசைத்துறைக்கும், சினிமாத்துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கலைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் த.மா.கா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com