தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் (பபாசி) சங்கத்தின் சாா்பில் நடைபெறும் சென்னை புத்தகக் காட்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
பபாசி சாா்பில் 45-ஆவது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று முதல் நடைபெறவுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு நடைபெற்ற எளிய விழாவில், முதல்வா் மு.க. ஸ்டாலின் புத்தகக் காட்சியைத் தொடக்கி வைத்தார். மாா்ச் 6-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் புத்தகக் காட்சி நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.
இதையும் படிக்க.. சிறுத்தைக்கு நேர்ந்த சோகம்: 2 நாள்கள், 30 பேர், இறுதியில் வெற்றி
தொடக்க நாளில், கருணாநிதி பொற்கிழி விருதுகளையும், பபாசி விருதுகளையும் முதல்வா் வழங்கவுள்ளாா். கரோனா கட்டுப்பாடு வழிமுறைகளைப் பின்பற்றி புத்தகத் திருவிழா நடைபெறவிருக்கிறது. புத்தகம் வாங்க வரும் வாசகா்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்காகச் சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெறும்.
இந்த புத்தகக் காட்சியில், மொத்தம் 800 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 500 பதிப்பாளா்களின் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தில்லி, மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சோ்ந்த பதிப்பாளா்களின் புத்தகங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. வழக்கம்போல், புத்தகங்களுக்கு 10 சதவீதம் கழிவு வழங்கப்படும். புத்தகக் காட்சிக்கு வருவதற்காக இதுவரை இணையவழியில் 40 ஆயிரம் நுழைவுச் சீட்டுகள் விற்பனையாகியுள்ளன.