தமிழகத்திலிருந்து திருடப்பட்ட 500 ஆண்டு பழமையான சிலை ஆஸி.யில் மீட்பு

தமிழகத்தில் திருடப்பட்ட 500 ஆண்டு பழமையான அனுமன் சிலை, ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டது.
தமிழகத்திலிருந்து திருடப்பட்ட 500 ஆண்டு பழமையான சிலை ஆஸி.யில் மீட்பு
Updated on
1 min read


சென்னை: தமிழகத்தில் திருடப்பட்ட 500 ஆண்டு பழமையான அனுமன் சிலை, ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: அரியலூர் மாவட்டம் வேலூர் என்ற கிராமத்தில் வரதராஜூ பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 9-ஆம் தேதி 500 ஆண்டு பழமையான அனுமன் சிலை திருடப்பட்டது. இது தொடர்பாக செந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். அதேவேளையில் இந்த சிலைத் திருட்டுத் தொடர்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினரும் விசாரணை செய்தனர்.

விசாரணையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த  பழமையான பொருள்களை ஏலம் விடும் நிறுவனமான, கிறிஸ்டி நிறுவனத்தின் இணையத்தளத்தில் திருடப்பட்ட சிலையின் புகைப்படம் இருப்பதும், அந்த நிறுவனத்தின் மூலம் அனுமன் சிலையை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு நபர் 37,500 அமெரிக்க டாலருக்கு வாங்கியிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த சிலையின் புகைப்படத்தை தொல்லியல்துறை ஆய்வுக்கு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் அனுப்பினர். தொல்லியல்துறையினர் நடத்திய ஆய்வில், வரதராஜூ பெருமாள் கோயிலில் திருடப்பட்ட அனுமன் சிலைதான் ஆஸ்திரேலியாவில் உள்ளது என உறுதி செய்தனர்.

இதையடுத்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், அந்த சிலையை சட்ட ரீதியாக மீட்டு, தமிழகத்துக்கு கொண்டு வருவதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்காக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர், இந்திய சட்ட அமலாக்க முகவர்கள்,உள்நாட்டு பாதுகாப்பு துறையினர் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், கிறிஸ்டி நிறுவனமும், சிலையை வாங்கிய ஆஸ்திரேலிய நபரும் அந்த சிலையின் தொன்மையை அறிந்திருக்கவில்லை என்பது தெரியவந்தது.

சிலை மீட்பு:  

அதேவேளையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் எச்சரிக்கைக்கு பின்னர், அமெரிக்க,ஆஸ்திரேலிய அரசு அதிகாரிகள் சிலையை மீட்பதற்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். இதன் விளைவாக ஆஸ்திரேலியாவின் கான்பெரோவில் உள்ள இந்திய அரசின் உயர் ஆணையத்தில் இந்திய உயர் ஆணையர் மன்பிரீத் வோஹ்ராவிடம் ஆஸ்திரேலிய அரசு அதிகாரி மைக்கேல் கோல்ட்மேன் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

இந்த சிலை இன்னும் ஒரு மாதத்துக்குள் தமிழகத்துக்கு கொண்டு வரப்படும் என தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ஜெயந்த் முரளி தெரிவித்தார். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளை, அவர் பாராட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com