கடலூர்: கடலூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்பு நடைபெற்ற முதல் தேர்தலில் திமுக வெற்றி பெற்று மேயர் பதவியை கைப்பற்றுகிறது.
கடலூர் மாவட்டத்தின் தலைநகரான கடலூர் நகராட்சியிலிருந்து அண்மையில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. எனினும், நகராட்சியில் இருந்த அதே 45 வார்டுகளுடனேயே மாநகராட்சிக்கான தேர்தலையும் சந்தித்தது. இத்தேர்தலில் 286 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். மொத்தமுள்ள 1,44,454 வாக்காளர்களில் 98,510 பேர் தங்களது வாக்கினை பதிவு செய்துள்ளனர். இது 68.19 சதவீதமாகும்.
தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. 45 வார்டுகளுக்கும் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில், திமுக கூட்டணி 34 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக வேட்பாளர்கள் 27 இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம் தனியாகவே மாநகராட்சியை கைப்பற்றியது.
கூட்டணியில் இடம் பெற்றுள்ள விசிக-3, தமிழக வாழ்வுரிமைக் கட்சி-3, காங்கிரஸ்-1 இடங்களை கைப்பற்றினர். இதில், விசிக, தவாக முழுமையான வெற்றியை பதிவு செய்தனர். கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 2 இடங்களிலும் தோல்வியைத் தழுவியது.
அதிமுக-6, பாஜக-1, பாமக-1, சுயேச்சைகள்- 3 இடங்களில் வெற்றி பெற்றனர்.
இதன்மூலம் கடலூர் மாநகராட்சியின் முதல் மேயராக பெண் தேர்வாக உள்ளார்.