சென்னை: பாம்பைக் காட்டி மக்களைப் பயமுறுத்தி பணம் பறித்த பெண்ணைத் தமிழக காவல் துறை தேடி வருகின்றனர்.
பெண் நாகப்பாம்புடன் இருக்கும் விடியோ வைரலானதை தொடர்ந்து, காவல் துறையினர் அவர் மீது தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தனர்.
தாம்பரம் காவல் நிலைய அதிகாரி ஒருவர் ஐஏஎன்எஸ்-க்கு அளித்த பேட்டியில், அந்தப் பெண் நாடோடியாகவும், பாம்பு பிடிப்பவராகவும் தெரிகிறது. அப்பெண் தாம்பரத்தில் உள்ள மேப்பாடு என்ற இடத்தில் வீடு வீடாகச் சென்று பணம் மற்றும் துணிகளைக் கேட்டு சென்றதாகவும், மறுத்தால் ஒரு கூடையிலிருந்து ஒரு பாம்பை வெளியே எடுத்து பயமுறுத்துவதாகவும் தெரிவித்தார்.
மேப்பாடு பகுதியைச் சேர்ந்த சுகுமாரன் நாயர் என்பவர் கூறியதாவது:
"அந்தப் பெண் காலையில் பணம் கேட்டு வந்தார். வீடுகளில், மக்கள் பணம் கொடுக்க மறுத்ததால், அவர் ஒரு கூடையைத் திறந்து ஒரு கருவியை வாசித்தார், அதிலிருந்து ஒரு நாகப்பாம்பு வெளியேறியது. குடியிருப்பாளர்கள் அவரிடம் பணத்தையும் ஆடைகளையும் கொடுத்து அனுப்பி வைத்தனர். படம்பிடிக்கப்பட்ட இந்த சம்பவமானது வைரலாக பரவி காவல் துறையினரால் கவனிக்கப்பட்டது" என்றார்.
பாம்பைக் காட்டி மக்களைப் பயமுறுத்திய அந்தப் பெண்ணைத் தேடும் பணியில் காவல் துறையினரும் வனத் துறை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.