வாலாஜாபாத் வந்த 16.8 அடி உயர கல்கருடன் சிலை: மக்கள் வழிபாடு

16.8 அடி உயர கல்கருடன் சிலை வரும் வழியில் வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் பொதுமக்களால் புதன்கிழமை சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் பொதுமக்களால் வழிபாடு செய்யப்பட்ட ஒரே கல்லாலான விஸ்வரூப அஷ்ட நாக  கல் கருடன்.
வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் பொதுமக்களால் வழிபாடு செய்யப்பட்ட ஒரே கல்லாலான விஸ்வரூப அஷ்ட நாக  கல் கருடன்.

காஞ்சிபுரம்: செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் செய்யப்பட்டு ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள ஸ்ரீதன்வந்தரி ஆரோக்கிய பீடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட 16.8 அடி உயர கல்கருடன் சிலை வரும் வழியில் வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் பொதுமக்களால் புதன்கிழமை சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் உள்ள சிற்பக்கூடத்தில் லோகநாதன் ஸ்தபதியால் 16.8 அடி உயரமும்,8 அடி அகலமும் உடைய விஸ்வரூப அஷ்டபுஜ நாக கருடன் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. இச்சிலை ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள தன்வந்தரி ஆரோக்கிய பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. 

இதற்காக மகாபலிபுரத்திலிருந்து டிராக்டரில் திருக்கழுக்குன்றம், நெம்மேலி, செங்கல்பட்டு, வாலாஜாபாத், காஞ்சிபுரம் வழியாக கல்கருடன் சிலை கொண்டு செல்லப்பட்டு பின்னர் புதன்கிழமை மாலையில் தன்வந்தரி ஆரோக்கிய பீடத்துக்கு சென்று சேருகிறது. வரும் வழியில் வாலாஜாபாத் பேருந்து நிலையம், முத்தியால்பேட்டை பிரசன்ன ஆஞ்சநேயர் உட்பட பல்வேறு பகுதிகளில் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து சிறப்பு வழிபாடும் செய்தனர்.

வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் திருக்கழுக்குன்றம் பைரவர் உபாசகர் அன்புச்செழியன் சுவாமிகள், தொழிலதிபர்கள் வேலாயுதம், பாண்டியன், மனோகர் ஆகியோர் உள்பட பக்தர்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.

இது குறித்து தன்வந்தரி ஆரோக்கிய பீடத்தின் ஸ்தாபகர் முரளீதர சுவாமிகள் கூறியது.. பட்சிராஜாவாக இருப்பவர் கெருடன், மகாபலிபுரத்தில் செய்யப்பட்ட இந்த கல்கருடன் சிலையானது 16.8 அடி உயரமும், 8 அடி அகலமும் உடையது. 8 தலைகள் உடைய நாகத்தோடு கூடிய ஒரே கல்லால் இச்சிலை மகாபலிபுரத்தில் லோகநாதன் ஸ்தபதியால் செய்யப்பட்டு இன்று தன்வந்தரி ஆரோக்கிய பீடத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. 

வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் உற்சாக வரவேற்பும், சிறப்பு வழிபாடுகளும் செய்து வருகின்றனர். இவரை வணங்கினால் சர்ப்பதோஷங்கள், திருமணம் மற்றும் புத்திரத்தடை, விஷ ஜந்துக்களால் ஏற்படும் தோஷங்கள், வாகன விபத்துகள், தோல் வியாதிகள் போன்றவை அகலும். மனக்குழப்பம் நீங்கி தைரியம் பிறக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com