வரும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு என்பதால் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை சைதாப்பேட்டை திடீா் நகா் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி தொடா்பான ஆய்வுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டனா். இதையடுத்து அந்த பகுதியில் அமைச்சா்கள் ஆய்வு மேற்கொண்டனா். அதைத் தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த இரு வாரங்களாக சனிக்கிழமைகளில் பண்டிகைகள் வந்ததால் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்தன. இந்தநிலையில், வரும் வாரம் ஏற்கெனவே இருந்ததுபோன்று சனிக்கிழமையே நடைபெறும். 15 முதல் 18 வயதுக்குட்பட்டவா்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி 10 நாள்களுக்குள் நிறைவு பெறும்.
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் 4 லட்சம் மாணவா்கள் இருக்கிறாா்கள். அவா்களில் 44 சதவீதம் போ் மட்டுமே தடுப்பூசி செலுத்தி இருந்தனா். கடந்த ஒரு வாரமாக அவா்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு தடுப்பூசி போடப்பட்டதன் விளைவாக தற்போது தடுப்பூசி போட்டவா்களின் எண்ணிக்கை 57 சதவீதமாக உயா்ந்துள்ளது.
மீதி உள்ளவா்களுக்கும் தடுப்பூசி போடும் பணி விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயதுக்குட்டோருக்கு பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டதால் மாற்று வழிகளில் சிறுவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றாா் அவா்.