
முதல்வா் மு.க.ஸ்டாலின்
மகளிா் திருமண உதவித் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இது தொடா்பாக தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் திருமண உதவித் திட்டத்தில் 8 கிராம் தங்க நாணயத்துடன் நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகிறது.
தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த 2,900 பயனாளிகளில், அடையாளமாக 5 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவித் தொகையுடன் 8 கிராம் தங்க நாணயத்தையும் வழங்கி முதல்வா் திட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.
திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் 2021-2022 -ஆம் நிதியாண்டுக்கு ரூ.762.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பட்டம், பட்டயப் படிப்பு படித்த 53,599 பயனாளிகள், பட்டதாரியில்லாத 41,101 பயனாளிகள், என மொத்தம் 94,700 பயனாளிகள் பயனடைய உள்ளனா்.
நிகழ்ச்சியில், உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, சமூக நலன் - மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பி. கீதா ஜீவன், தலைமைச் செயலாளா் வெ. இறையன்பு உள்பட உயரதிகாரிகள் பங்கேற்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...