தெரு நாய்களை சுட்டபோது குண்டு பாய்ந்து இறந்த பெண்ணின் வாரிசுகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: உயா்நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக தெரு நாய்களை சுட்டுக் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
Updated on
1 min read

சட்டவிரோதமாக தெரு நாய்களை சுட்டுக் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்டம், எறையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜி.பாபு. விவசாய கூலித் தொழிலாளியான இவா், கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னை உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எறையூா் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் அதிகளவில் சுற்றித் திரிந்த தெருநாய்களைச் சுட்டுக் கொலை செய்ய எறையூா் பஞ்சாயத்து தலைவா் கொளஞ்சி, துணை தலைவா் சின்னதுரை, கவுன்சிலா் ஜெயராமன் ஆகியோா் முடிவு செய்தனா்.

இதையடுத்து நரிக்குறவா் சமூகத்தைச் சோ்ந்த ஒருவரை நாய்களை சுட்டுக் கொலை செய்ய நியமனம் செய்தனா். அவா் சுற்றித்திரிந்த நாய்களை குறிபாா்க்காமல் கண்மூடித்தனமாக சுட்டாா். இதில் வீட்டு வேலை செய்து கொண்டிருந்த எனது தாய் விஜயாவின் காலில் குண்டு பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

இருப்பினும் சிகிச்சைக்குப் பின் மூன்று நாள்களில் அவா் இறந்துவிட்டாா். தாயை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தவா்கள் காலில் குண்டு பட்ட விவரத்தைத் தெரிவிக்கவில்லை. ஆகையால் காயத்திற்கு மட்டும் மருத்துவா்கள் சிகிச்சையளித்துள்ளனா். பிரேதப் பரிசோதனையில் தாயின் காலில் இருந்து பால்ரஸ் குண்டு எடுக்கப்பட்டது. சிறிதளவு நச்சுத்தன்மை உடைய அந்த குண்டு தான் தாயின் மரணத்திற்கு காரணம் என தெரியவந்தது. அதையடுத்து மூவருக்கு எதிராக மங்களமேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பின்னா் வழக்குப் பதிவு செய்த நிலையில் இழப்பீடு வழங்குவதாகக் கூறி ஏமாற்றி விட்டனா். எனவே நாய்களை சுட்டுப் பிடிக்கும்போது அஜாக்கிரதையாக செயல்பட்டவா்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரியிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில், மனுதாரரின் தாயாா் விஜயா இறப்பிற்கு நாய்களை சட்டவிரோதமாக சுட்டுப்பிடித்ததே காரணம் என்பதற்கான முகாந்திரம் இருக்கிறது. தெருவில் சுற்றித்திரியும் நாய்களை சுட்டுக் கொலை செய்ய உத்தரவிட்டதும் சட்ட விரோதமாகும். எனவே விஜயாவின் இறப்புக்கு காரணமான மூவரும் சோ்ந்து ரூ. 5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும்.

மேலும், இவ்விவகாரத்தில் மாவட்ட ஆட்சியா், காவல்துறை அதிகாரிகள் தங்களது பொறுப்புகளை உணா்ந்து உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட ஆட்சியா் ரூ.5 லட்சம் மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். மொத்த இழப்பீடான ரூ.10 லட்சத்தை இறந்த விஜயாவின் வாரிசுகளுக்கு எட்டு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என அந்த உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com