சங்ககிரி கிராமப்பகுதிகளில் மாட்டுப்பொங்கலை சிறப்பாக கொண்டாடிய விவசாயிகள்
சங்ககிரி: தைப் பொங்கல் திருநாள்களில் முக்கியத்துவம் வாய்ந்த மாட்டுப் பொங்கலையடுத்து சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட கிராமப்பகுதிகளில் சனிக்கிழமை விவசாயிகள் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.
தைத் திருநாளான தமிழர் திருநாள் பொங்கல் விழா தமிழகத்தில் 4 நாள்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை மாட்டுப் பொங்கலையொட்டி சங்ககிரி வட்டம் அரசிராமணி செட்டிப்பட்டி, ஒடசகரை கிராமத்தில் விவசாயிகள் அதிகாலையிலேயே எழுந்து பசு மாடுகளை நன்றாக தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணங்கள் பூசியும், ரிப்பன்கள், கலர் காகிதங்களை கட்டியும், சலங்கைகளுடன் கூடிய புதிய கயிறுகளை கட்டியும் அலங்கரித்தனர்.
இதையும் படிக்க.. உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவனுக்காக பள்ளிச் செல்லும் அவதார் ரோபோ
அதனையடுத்து விவசாயிகளின் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து புதிய மண்பானையில் பச்சரிசி சர்க்கரை பொங்கல் வைத்தும் சூரிய பகவானை நோக்கி கரும்புகளை கட்டி பந்தல் அமைத்தனர். பந்தலை சுற்றிலும் வேப்பிலை, ஆவாரம்பூ, பூளை பூக்களை கொண்டும் மற்றும் மஞ்சள் கிழங்குடன் கூடிய செடிகளை கட்டியும் அலங்கரித்தனர்.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட பந்தலுக்கு கீழே மாட்டு சாணத்தில் தெப்பகுளம் கட்டி சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வாழை இலைகளை படையலிட்டு குடும்பத்துடன் மாடுகளை வணங்கினர். பூஜைகள் முடிந்த பின்னர் விவசாயிகள் குடும்பத்துடன் மாடுகளுக்கு பொங்கல், வாழைப்பழங்களை கொடுத்து பொங்கலோ பொங்கல் என்று சப்தமிட்டு மாட்டுப்பொங்கலை கொண்டாடினர்.
தொடர்ந்து சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட பல்வேறு கிராமப்பகுதிகளிலும் விவசாயிகள் மாட்டுப்பொங்கலை கொண்டாட பல்வேறு ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.