திருச்சி மாவட்டம் பெரிய சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் மாட்டு பொங்கல் நாளில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணியளவில் தொடங்குகிறது. வாடிவாசல் மற்றும் பார்வையாளர்களுக்கான இடங்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஜல்லிக்கட்டில் அதிகபட்சமாக 400 மாடுகள் பங்கு பெறவும், 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ளவும் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் 400 காளைகள், 300 வீரர்கள் களம் காணுகின்றன.
உள்ளூர் மக்களுக்கு மட்டுமே நிகழ்ச்சியை காண அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளியூர் பார்வையாளர்கள் அனுமதியில்லை.
வெற்றி பெறும் வீரர்களுக்கும், களத்தில் பிடிபடாத காளைகளுக்கு தங்கக்காசு, கட்டில் பீரோ பசுமாடு சைக்கிள் ஏர்கூலர் ரெஃப்ரிஜிரேட்டர் வாஷிங் மெஷின் எவர்சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
ஜல்லிக்கட்டை முன்னிட்டு பலத்த காவல் துறையினர் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு காயமடையும் வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவக் குழுவினர் மற்றும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
நேற்று நடைபெற்ற மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 7 சுற்றுகளாக நடைபெற்றது. ஒவ்வொரு சுற்றுக்கும் 50 வீரர்கள் பங்கேற்றனர்.