திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
உலகப்பொதுமறை, பொய்யாமொழி, தெய்வநூல் எனப் பல பெயர்களாலும்
அழைக்கப்படும் உலகம் போற்றும் திருக்குறள் நூலை இயற்றிய திருவள்ளுவரைப் பெருமைப்படுத்தும் வகையில் 1970-ஆம் ஆண்டு முதல் தைத்திங்கள் இரண்டாம் நாள் திருவள்ளுவர் திருநாளாக கொண்டாப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருவள்ளுவர் நாளான இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின், அதற்காக நடத்தப்பட்ட திருக்குறள், ஓவியப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, தொழில், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வீட்டுவசதித் துறை அமைச்சர் சு. முத்துசாமி, செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் / தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப., தமிழறிஞர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.