தில்லியில் நடைபெறும் குடியரசு நாள் அணிவகுப்பில் பங்கேற்கும் தமிழக அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தில்லியில் நடைபெறும் சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாள் விழா அணிவகுப்பில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்களை கொண்ட ஊர்திகள் இடம்பெறும்.
இந்நிலையில், வ.உ.சிதம்பரனார், வேலுநாச்சியார், பாரதியார் உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்கும் தமிழகத்தின் அலங்கார ஊர்தியை இந்தாண்டு மத்திய அரசு நிராகரித்துள்ளது.
மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாகவும், வ.உ.சி., வேலுநாச்சியார் போன்றவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது என்பதால் நிராகரிக்கப்பட்டதாக மத்திய அரசு கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும், தென் மாநிலங்களை பொறுத்தவரை கர்நாடகத்தை தவிர கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களின் ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க.. குடியரசு நாள் அணிவகுப்பு; மாநிலங்களுக்கு அவமதிப்பு - வைகோ கண்டனம்
முன்னதாக, சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை தாங்கிய மேற்கு வங்க ஊர்தியை மத்திய அரசு நிராகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமருக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.