கடலூரில் புதிதாகக் கட்டப்பட்ட கால்நடை மருந்தக கட்டடத்தை திறந்து வைத்தார் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.31.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தக கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
தொடர்ந்து திருவந்திபுரம் பகுதியில் கனமழையினால் சேதமடைந்துள்ள சாலைகளை பார்வையிட்டு அவற்றினை விரைந்து சீரமைக்க ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார்.
அப்போது அமைச்சர் தெரிவித்ததாவது, இந்த கால்நடை மருந்தக கட்டடம் ரூ.31.50 இலட்சம் மதிப்பீட்டில் நபார்டு திட்டத்தின் மூலம் கட்டப்பட்டுள்ளது. திருவந்திபுரம், ஓட்டேரி, திருமானிக்குழி, பில்லாலி, தொட்டி, குணமங்கலம், வரக்கால்பட்டு, மருதாடு, செஞ்சிகுமாரபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு இந்த மருந்தகம் பயனுள்ளதாக அமையும் என தெரிவித்தார்.
மேலும் இப்பகுதியில் உள்ள கிராமங்களில் சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம் நடத்துதல், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி மேற்கொள்ளுதல், குடற்புழு நீக்கம் செய்தல், ஆண்மை நீக்கம், செய்றகை முறை கருவூட்டல் மலடு நீக்க சிகிச்சைகள், சினைபரிசோனை, வாத அறுவை சிகிச்சை மற்றும் சிறு அறுவை சிகிச்சைகள் ஆகிய பணிகள் கால்நடை மருத்துவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இக்கால்நடை மருந்தகத்தால் பசுக்கள், எருமைகள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள்,கோழிகள் உள்ளிட்ட 14,092 கால்நடைகள் பயன்பெற்று வருகின்றன.
மேலும் இக்கிராமங்களில் தேசிய அளவிலான செயற்கை முறை கருவூற்றல் திட்டம்,தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம், தேசிய கால்நடை காப்பீட்டு திட்டம், மாநில தீவன அபிவிருத்தி திட்டம் ஆகிய திட்டங்கள் சிறந்த முறையில் செயல்படுத்தப்படுகிறது என தெரிவித்தார்.