பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நகரச் செயலராக இருப்பவர் வினோத் (48). இவர், ஏற்கெனவே அரசு வேலை வாங்கித்தருவதாக பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக பெரம்பலூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இவர் மீது பூலாம்பாடியைச் சேர்ந்த சுய நினைவில்லாத மாற்றுத் திறனாளியின் மனைவி சுதாலட்சுமி (40) என்பவர் அரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அதில், பூலாம்பாடி அதிமுக நகரச் செயலர் வினோத், தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், கத்தியை காட்டி மிரட்டி, ஆசைக்கு இணங்க வற்புறுத்தினார்.
மேலும், தன்னுடைய ஆசைக்கு இணங்காவிட்டால் நான் நடத்தி வரும் கேஸ் கம்பெனியோடு கொளுத்திவிடுவேன் என அதிமுக நகரச் செயலர் வினோத் அடிக்கடி மிரட்டி கொடுத்தார் என, புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், அரும்பாவூர் போலீஸார் வழக்குப் பதிந்து நகரச் செயலர் வினோத்தை தற்போது கைது செய்துள்ளனர். பாலியல் புகாரில் பூலாம்பாடி அதிமுக நகரச் செயலர் வினோத் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.