மொழிப் போரில் உயிரிழந்த தியாகிகளுக்கு நாளை அஞ்சலி செலுத்த வேண்டும் என திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்டச் செயலாளர்களுக்கு கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,
“கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஜனவரி 25-ஆம் நாள் - மொழிப்போர் தியாகிகள் நாளில் எப்போதும்போல் வீரவணக்கம் செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. ஆகவே, ஹிந்தி மொழி திணிப்பு எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு அன்னைத் தமிழ்மொழி காக்க உயிர்த் தியாகம் செய்த தியாகிகளின் படத்தினை மாவட்ட திமுக அலுவலகங்களில் மலர்களால் அலங்கரித்து வைத்து, மாவட்டச் செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள், முன்னோடிகள், நிர்வாகிகள் அனைவரும் மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்த நிகழ்ச்சியில் அரசு விதித்துள்ள கரோனா கட்டுப்பாடுகளை முழுமையாகக் கடைப்பிடித்திடவும் அன்புடன் வேண்டுகிறேன்.”