நாட்டின் 73-வது குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தில் தேசியக்கொடியை ஏற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார்.
சென்னை காமராஜர் சாலை காந்தி சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார். தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி முதல் பதவியேற்ற பிறகு முதல் முறையாக மெரினா கடற்கரையில் நாட்டுப்பண் இசைக்க தேசியக் கொடியை ஏற்றினார்.
முன்னதாக காமராஜர் சாலையில் குடியரசு தினவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்திற்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
இதனைத்தொடர்ந்து தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முப்படை மரியாதை
இதனையடுத்து மேடைக்குச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இதேபோன்று காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையும் ஆளுநர் ஏற்றார்.
கரோனா பரவல் காரணமாக குடியரசு தினவிழாவில் கலை நிகழ்ச்சிகளுக்கும் பொதுமக்களுக்கும் பங்கேற்க அனுமதி வழங்கவில்லை. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் வீட்டில் இருந்தவாறே நிகழ்ச்சிகளை காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடியரசு தினவிழா கொண்டாட்டத்தையொட்டி சென்னை, காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 6,800 காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் மூலம் சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
30 நிடங்களில் குடியரசு நாள் விழா நிறைவு
கரோனா பரவலால் இந்த ஆண்டு 30 நிமிடங்களில் குடியரசு நாள் விழா நிறைவு பெற்றது. வழக்கமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குடியரசு நாள் விழா நடைபெறும். கரோனா பரவல் காரணமாக கலைநிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் கலந்துகொள்ளவும் அனுமதி மறுக்கப்பட்டது.