மூத்த காங்கிரஸ் தலைவர் எஸ். சிங்கார வடிவேல் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான எஸ். சிங்கார வடிவேல் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். விவசாய குடும்பத்தில் பிறந்த அவர், மிகச் சிறந்த வழக்கறிஞராக இருந்தவர்.
காங்கிரஸ் கட்சியின் சார்பாக தஞ்சை தொகுதியிலிருந்து நான்கு முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தேசிய கயிறு வாரிய உறுப்பினராக இருந்தவர். விவசாயம் மற்றும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக மக்களவையில் ஒலித்தவர்.
மக்கள் நலத் தொண்டராக பணியாற்றி காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தியவர். மென்மையானவர், பழகுவதற்கு இனியவர். எஸ். சிங்கார வடிவலின் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு மிகுந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.