தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதவிருக்கும் விண்ணப்பத்தாரர்கள் தங்களது விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விரும்புவோர், வரும் 11 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதிக்குள் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மூலம் மார்ச் 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பத்தாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை வழங்கப்பட்டது.
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-க்கு 2,30,878 பேரும், தாள் 2 -க்கு 4,01,886 என 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மேலும், விண்ணப்பத்தாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கைகள் தொடர்ந்து அலுவலகத்திற்கு பெறப்பட்டு வந்தது.
விண்ணப்பத்தாரர்களின் கோரிக்கையினை ஏற்று ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 -க்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் வரும் 11 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதிக்குள் திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற திருத்தம் தொடர்பான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.