ஓ.பன்னீர்செல்வம் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீா்ப்பு வழங்கியுள்ள நிலையில், சென்னை உயா்நீதிமன்றமும் பொதுக்குழுவை கட்சி விதிகளுக்கு உள்பட்டு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு திங்கள்கிழமை காலை 9.15 தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பொதுக்குழுவை புறக்கணித்து அதிமுகவின் ஓபிஎஸ் இன்று கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரை உள்ளே அழைத்துச் சென்றனர்.
அப்போது, அங்கிருந்த இபிஎஸ் ஆதரவாளர்களும் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் மோதிக் கொண்டதில் சிலர் காயமடைந்தனர். பொதுச் சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் பெரும் சேதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.