சேலம் பெரியார் பல்கலைக்கழக பருவத் தேர்வில் சாதி குறித்த கேள்வி இடம் பெற்றதற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் சாதிய ரீதியான கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையாகி உள்ளது. முதுகலை வரலாறு 2-ம் ஆண்டு தேர்வு வினாத்தாளில், 4 சாதிப் பிரிவுகளைக் குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி? என கேள்வி இடம் பெற்றுள்ளது. இந்த கேள்வி கடும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. இதற்கு பல்கலைக்கழகம் தரப்பில் இருந்து வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழக பருவத் தேர்வில் சாதி குறித்த கேள்வி இடம் பெற்றதற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பதிவில், சேலம் பெரியார் பல்கலைக்கழக முதுகலை வரலாறு பருவத்தேர்வு வினாத்தாளில், 4 சாதிப் பிரிவுகளைக் குறிப்பிட்டு, தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி என்று கேட்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது.
இதையும் படிக்க- பத்திரிகையாளர் முகம்மது சுபைருக்கு நிபந்தனை ஜாமீன்!
சாதிப் பிரிவுகள் கூடாது என்று கற்றுத்தர வேண்டியவர்களே சாதியை முன்னிலைப்படுத்தி கேள்வி கேட்கலாமா?. அதுவும், வாழ்நாள் முழுவதும் சாதிக்கு எதிராகப் போராடிய பெரியாரின் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில், விஷமத்தனமான கேள்வியால் மாணவர்கள் நெஞ்சில் நஞ்சைத் தூவ முயற்சிப்பது ஏற்கத்தக்கதல்ல.
இனியும் இதுபோல நேரிடாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் கடும் நடவடிக்கைகள் அவசியம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.