மத உணர்வுகளைத் தூண்டும் விதமாக கருத்து பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் முகம்மது சுபைருக்கு தில்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
மத உணர்வுகளைத் தூண்டும் விதமாக கடந்த 2018ல் ட்விட்டரில் கருத்து பதிவிட்டதற்காக தனியார் பத்திரிக்கை நிறுவனரும் பத்திரிகையாளருமான முகம்மது சுபைர் கடந்த ஜூன் 27 ஆம் தேதி தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து தில்லி நீதிமன்றம் இன்று அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ரூ. 50,000 வைப்புத்தொகை மற்றும் நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி முகம்மது சுபைர் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும் அவருக்கு இடைக்கால ஜாமீன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | இணையதள செய்தியாளா் முகமது சுபைருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்