விஜய்யின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் எத்தனை வேறுபாடுகள்?
விஜய்யின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் வேறுபாடுகள் இருப்பது பற்றி..

த.வெ.க.தலைவா் விஜய்.
DPS

த.வெ.க.தலைவா் விஜய்.
DPS
தவெக தலைவர் விஜய், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் நிலையில், இரண்டு வேட்புமனுக்களிலும் பல வேறுபாடுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் தாக்கல் செய்ய சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களில் வேறுபாடுகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
பல ஊடகங்களில் இன்று காலை முதலே, தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்ததாகக் கூறி இரண்டு வேட்பு மனுக்களும் வேகமாகப் பரவி வருகிறது. அதாவது நடிகரும், தவெக தலைவருமான விஜய் தாக்கல் செய்த இரண்டு தனித்தனி தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் முரண்பாடுகள் வெளிப்பட்டிருப்பது, பேசுபொருளாகியிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், திருச்சி கிழக்குத் தொகுதியில் விஜய் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பெரம்பூர் தொகுதியில் விஜய் தாக்கல் செய்தவேட்பு மனுவில், அவரது வயது 52 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதன் பிறகு 2 நாள்கள் கழித்து, திருச்சி கிழக்குத் தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் 51 வயது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தவறு ஏன் நேரிட்டது, இரண்டு நாள்களில் 1 வயது குறைந்தது எப்படி என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், சென்னைக்கு உள்பட்ட பெரம்பூர் தொகுதியில் மார்ச் 30ஆம் தேதி விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனக்கு எதிராக எந்த குற்றவியல் வழக்குகளும் நிலுவையில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கு நேர்மாறாக, திருச்சி கிழக்குத் தொகுதியில் ஏப். 2ஆம் தேதி தாக்கல் செய்த வேட்பு மனுவில், தன் மீது இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, மதுரை மாவட்டம் கூடகோவில் காவல்நிலையத்தில் ஒரு முதல் தகவல் அறிக்கையும், சென்னை பெரவள்ளூர் காவல்நிலையத்தில் ஒரு முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், தவெக பிரசாரத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது, விஜய் பாதுகாவலர்களால் மக்களுக்கு காயம் ஏற்பட்டது போன்றவை குறித்து இந்த வழக்குகள் பதிவாகியுள்ளன.
இது மட்டுமல்லாமல், தேர்தல் செலவினக் கணக்கு தொடர்பான நிதி நிலைமை குறித்த அறிவிப்பிலும் வேறுபாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. பெரம்பூர் வேட்பு மனுவில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தேர்தல் செலவினத்துக்காக ஒரே ஒரு வங்கிக் கணக்குத் தொடங்கியிருப்பதாகவும், அதில் ரூ.1 லட்சம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், திருச்சி வேட்பு மனுவில், இரண்டு தொகுதிகளுக்கும் தனித்தனியாக இரண்டு வங்கிக் கணக்குகள் தொடஙகப்பட்டு திருச்சியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் ரூ.90 ஆயிரம் வரவு வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரத்தில் வேறுபாடுகள் இருப்பது , தவறான தகவல்களை தருதல் அல்லது திசை திருப்புதல் போன்று மக்கள் பிரதிநிதிகள் சட்டம் 1951-ன் கீழ் மோசமான விதிமீறலாக எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.
சரியான தகவல்களைத் தராமல் இருப்பது, தவறான தகவல்களை பதிவு செய்தல் போன்றவை அபராதம் அல்லது 6 மாதங்கள் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விஜய் போட்டியிடும் தொகுதிகளில் போட்டியிடும் பிற வேட்பாளர்கள், இது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டால் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதுவரை தவெக கட்சி நிர்வாகிகள் அல்லது தலைமையிடமிருந்து எந்த விளக்கமும் வரவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...