காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவித்து அதிகாரிகள்
வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டூர் அணையின் உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் விடுத்துள்ள செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 119 அடியை எட்டியுள்ளது. அணையின் நீர்வரத்து அதிகப்படியாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் விரைவில் அதிகபட்ச கொள்ளளவான 120 அடியை எட்டவுள்ளது.
அணையில் இருந்து உபரி நீர் கால்வாயில் ஐம்பதாயிரம் கன அடி முதல் ஒரு லட்சம் கன அடி வரை எந்த நேரத்திலும் திறந்து விடப்படலாம் என்றும்,
திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
எனவே, காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அவர்களின் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | முழுக் கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை!