மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது.
கர்நாடக அணைகள் நிரம்பியதால் உபரி நீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளதால் கடந்த 5 நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
இந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 119.29 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 671 கன அடி தண்ணீர் வருகிறது. அணையின் கொள்ளளவு 92.343 டிஎம்சி ஆகும்.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தற்போது 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காலை 10 மணியளவில் மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது.
மேட்டூர் அணை நிரம்பியதால் இன்று காலை 11 மணி அளவில் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. மேட்டூர் அணை 16 கண் மதகு வழியே தண்ணீர் வெளியேற்ற நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேட்டூர் அணை காவிரி கரையோர பகுதிகளிலும், மேட்டூர் அணையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தண்டோரா போட்டு எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
42 ஆவது முறையாக மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியது குறிப்பிடத்தக்கது.