கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் விரைவில் நலம்பெற விழைகிறேன் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஓ. பன்னீர்செல்வத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு லேசான காய்ச்சல் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், அவருக்கு கரோனா தொற்று பாதிப்பில்லை என்றும், லேசான காய்ச்சல் மட்டுமே இருப்பதாகவும், அதற்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், ஓரிரு நாள்களில் வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | இது சூரத் மாடல்: மழையால் பல்லாங்குழியான குஜராத் சாலைகள் (விடியோ)
முன்னதாக, ஒருசில நாள்களுக்கு முன்பு, கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் நலம்பெற பிரார்த்தனை செய்வதாக ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருந்த நிலையில், இன்று ஓ. பன்னீர்செல்வம் நலம்பெற வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.