மானாமதுரை: சத்தீஸ்கர் மாநிலத்தில் அகில இந்திய கராத்தே போட்டியில் முதலிடத்தை பெற்று தங்கம் வென்று செவ்வாய்கிழமை சிவகங்கை மாவட்டம் மானாமதுரை திரும்பிய இளம் வீராங்கனைக்கு ரயில் நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஷ்பூரில் அகில இந்திய கராத்தே விளையாட்டுக் கழகம் சார்பில் கடந்த வாரம் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. போட்டியில் பங்கேற்க மானாமதுரை நாகர்ஜூன் சிட்டோரியோ கராத்தே பயிற்சி பள்ளியைச் சேர்ந்த பிரியதர்ஷினி, ரதீபா, கவினேஷ், டிக்ஸன் ஆகிய நால்வரும் பள்ளியின் தலைமைப் பயிற்சியாளர் சிவ. நாகர்ஜுன் தலைமையில் சென்று பங்கேற்றனர்.
இதையும் படிக்க.. குடியரசுத் தலைவராக தகுதி என்ன? சம்பளம் எவ்வளவு??
போட்டியில் கட்டாப் பிரிவு கராத்தே போட்டியில் இளம் வீராங்கனை பிரியதர்ஷினி(12) முதல் இடத்தைப் பெற்றார். இவருக்கு பரிசாக தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து ரயில் மூலம் மானாமதுரை திரும்பிய பயிற்சியாளர் சிவ நாகர்ஜூன் தங்கப்பதக்கம் வென்ற இளம் வீராங்கனை ஏ.பிரியதர்ஷினி மற்றும் போட்டியில் பங்கேற்ற ரதிபா,கவினேஷ், டிக்ஸன் ஆகியோருக்கு கராத்தே பயிற்சி பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து வரவேற்பளித்தனர்.
தங்கப்பதக்கம் வென்ற பிரியதர்ஷினிக்கு மானாமதுரை பகுதியைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர்களும் பாராட்டு தெரிவித்தனர்.