கும்பகோணம் அருகே அரசு மருத்துவமனையில் செவிலியரை கொலை செய்ய முயற்சித்தவரை தடுத்த ஊழியரை பாட்டிலால் தலையில் தாக்கிவிட்டு, பின்னர் தனக்குத்தானே பாட்டிலால் குத்திக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் அரசு மருத்துவமனையில் மஞ்சுளா என்பவர் செவிலியராக பணியாற்றி வருகிறார் .
புதன்கிழமை இரவு பணியில் இருந்தபோது வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மது போதையில் தள்ளாடியபடியே வந்த அப்துல் ரகுமான் என்பவர் மஞ்சுளாவின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனைப் பார்த்த மருத்துவமனை ஊழியர் சதாசிவம் என்பவர் அப்துல் ரகுமானை தடுத்ததால் ஆத்திரமடைந்த ரகுமான் கையில் வைத்திருந்த பாட்டிலால் சதாசிவத்தின் தலையில் அடித்ததில் அவருக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மது போதையில் இருந்த அப்துல் ரகுமான் தனக்குத்தானே பாட்டிலால் குத்திக் கொண்டார்.
இதையும் படிக்க | புதுச்சேரியில் மறியல்: நாராயணசாமி உள்ளிட்ட 250 பேர் கைது
இதுகுறித்து உடனடியாக நாச்சியார் கோயில் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.
பாட்டிலால் குத்திய அப்துல் ரகுமான், அடிபட்ட சதாசிவம் ஆகிய இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அப்துல் ரகுமானுக்கு இன்னமும் போதை தெளியாமல் உள்ளதால் தப்பித்து ஓடிவிடாமல் இருப்பதற்காக அவரது கால்கள் கட்டப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனை வளாகத்திலேயே படுக்க வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் நாச்சியார் கோவில் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
எதற்காக, அப்துல் ரகுமான் மஞ்சுளாவை கொலை செய்ய முயற்சித்தார் என்பது குறித்து நாச்சியார் கோயில் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.