நேஷனல் ஹாரால்டு பத்திரிக்கை வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விசாரணைக்கு ஆஜர் படுத்தியதைக் கண்டித்து, புதுச்சேரியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிசார் 250 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
புதுதில்லியில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறை விசாரணைக்கு வியாழக்கிழமை ஆஜரானார். இது மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில், புதுச்சேரி மாநில காங்கிரசார் புதுச்சேரி இந்திரா காந்தி சிலை சந்திப்பு அருகே வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க | அமலாக்கத்துறை முன் ஆஜரானார் சோனியா காந்தி
காங்கிரஸ் மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், எம்எல்ஏ மு. வைத்தியநாதன், முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே முடிந்துபோன வழக்கை, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழிவாங்கும் நடவடிக்கையாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக வைத்து, அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக செயல்படும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து கோஷமிட்டனர்.
இதனை அடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 250 பேர் கைது செய்யப்பட்டனர்.