கோவை அட்டுக்கல் வனப்பகுதியில் இறந்த நிலையில் ஒரு மாத ஆண் யானைக்குட்டி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், யானைகுட்டி உயிரிழப்பு குறித்து கால்நடை மருத்துவர்கள் உடல் கூறாய்வு மேற்கொள்ள உள்ளனர்.
கோவை வனச்சரகம் கெம்பனூர் வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் வியாழக்கிழமை மாலை ரோந்துச் சென்றனர். அப்போது அட்டுக்கல் அடர்வனப் பகுதியில் சென்ற போது அங்கு பிறந்து சுமார் 1 மாதமே ஆன நிலையில் ஆண் யானைக்குட்டி இறந்த நிலையில் கண்டறியப்பட்டது.
இதையும் படிக்க | மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 42 ஆயிரம் கன அடியாக சரிவு
இதையடுத்து அங்கு வனத்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் மாலை நேரம் ஆனதால் யானைக்குட்டிக்கு பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில், ஒரு மாத யானைகுட்டியின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து கண்டறிய கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் யானைகுட்டிக்கு உடல் கூறாய்வு மேற்கொள்ள உள்ளனர். உடற்கூறாய்வு முடிவிற்கு பிறகே காரணம் தெரியவரும், கடந்த சில நாள்களுக்கு முன் சிறுமுகை வனப்பகுதியில் 2 மாத யானைக்குட்டி சடலமாக கண்டறியப்பட்ட நிலையில், மீண்டும் 1 மாத ஆண் யானைக்குட்டி இறந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது.