சென்னை மாநகராட்சியில் அரசுக்கு சொந்தமான மற்றும் பொது இடங்களில் குப்பைக் கொட்டியவர்களிடமிருந்து கடந்த 2 வாரங்களில் ரூ.12.13 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகரைத் தூய்மையாகவும், அழகுடனும் பராமரிக்க சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 7ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கும், அரசு, மாநகராட்சி கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டிய நபர்களுக்கும் ரூ.12,13,820 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அரசு, மாநகராட்சி கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டியது தொடர்பாக 302 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனால், பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் எனவும் மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.