கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில் குடிநீர் குழாய்க்கு தோண்டப்பட்ட பள்ளத்தில், வாகனங்கள் சென்று மண்ணில் புதைந்து கவிழ்ந்ததால் புதன்கிழமை அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம், கம்பம் பாரதியார் நகர், காளவாசல் ரோடு, வரதராஜபுரம், கிராமச்சாவடி தெரு ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க நகர்மன்றம் முடிவு செய்யப்பட்டது.
அதன் பேரில் ஆணையாளர் குடியிருப்பு பூங்கா திடல் அருகே புதிய பிரதான பகிர்மான குழாய் அமைத்து, அதிலிருந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெரு, வ.உ.சி. திடல் வழியாக காளவாசல், கிராமச்சாவடி தெரு வரை பிரதான குழாய் தற்போது அமைக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | மாணவர்கள் காலை உணவை தவிர்க்கக் கூடாது: முதல்வர் ஸ்டாலின்
இதற்காக, சாலையோரத்தில் பள்ளங்கள் தோண்டப்பட்டு பெரிய குழாய்கள் பொருத்தப்பட்டன. பின்னர் தோண்டப்பட்ட பள்ளங்கள் மண்ணால் அரைகுறையாக மூடப்பட்டு அந்த பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் இயக்கம் நடைபெற்றது.
காந்திஜி பூங்கா அருகே குழாய் உடைந்ததால் தண்ணீர் வெளியேறி மண் அரிப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் சிக்கிக் கொண்ட ஜீப் வாகனம்.
இந்நிலையில், புதன்கிழமை காந்திஜி பூங்கா அருகே மணல் ஏற்றி சென்ற டிராக்டர் வாகனம் பிரதான குழாய் பதிக்கப்பட்ட மண்ணின் மேற்பரப்பில் சென்றபோது எடை தாங்காமல், பள்ளம் ஏற்பட்டு கவிழ்ந்தது, இதில், குழாயும் உடைந்ததால் தண்ணீர் வெளியேறி மண் அரிப்பு ஏற்பட்டு அப்பகுதியில் நின்றிருந்த ஜீப் வாகனமும் பள்ளத்தில் சிக்கி கொண்டது.
இதனால் அதிகமான நடமாட்டம் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை நேரம் என்பதால் பொதுமக்களும், காய்கனி வியாபாரிகள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளும் பெரும் அவதிக்குள்ளாகினர் என்பது குறிப்பிடதக்கது.