பள்ளி மாணவர்கள் காலை உணவை தவிர்க்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.
சென்னை அசோக் நகர் பள்ளியில் மாணவர்களுக்கு மனநலம் பற்றிய விழிப்புணர்வு வாகனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 805 வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கு சென்று மருத்துவக் குழுவினர் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கவுள்ளனர்.
இந்த விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கிவைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்க இருக்கிறது. அதற்கான அரசாணையில் நேற்றுதான் கையெழுத்திட்டேன்.
மாணவர்கள் எக்காரணத்தை கொண்டும் காலை உணவை தவிர்க்கக் கூடாது. காலையில்தான் அதிகமாக சாப்பிட வேண்டுமென்றும், மதியம் குறைவாகவும், இரவில் அதைவிட குறைபாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், மருத்துவர்கள் கூறுவதற்கு மாறாக காலையில் குறைவாகவும், இரவில் அதிகமாகவும் நாம் சாப்பிடுகிறோம்.
மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்துவிட்டால் தானாக படிப்பு வந்துவிடும். நல்ல செயல்களும், உடற்பயிற்சியும் ஆரோக்கியமான மனநிலையை தரும் என்றார்.