சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பிரதமர் நரேந்திர மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கோலாகலமாக இன்று (ஜூலை 28) நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்கியது.
அதில் கலந்து கொண்டு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: “ பிரதமர் நரேந்திர மோடி இதே இடத்திலிருந்து தமிழகத்திற்காக பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். தொடங்கி வைத்த இரண்டு மாதங்களில் மிகப் பெரிய சாதனையை செய்துள்ளார். 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் நடக்காத ஒரு மாபெரும் சாதனையை அவர் செய்துள்ளார். சதாரணப் பழங்குடியினப் பெண் திருமதி முர்மு அவர்களை நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு கொண்டு வந்துள்ளார். அவர் ஒரு வரலாற்று நாயகன். இந்த 8 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தமிழகத்தின் பெருமை, தமிழகத்தின் சிறப்பு ஆகியவற்றை உலக அளவில் எடுத்துச் சென்றவர் அவர். ஐநாவில் யாதும் ஊரே, யாவரும் கேளிர் எனப் பேசினார். வராணாசியில் தமிழ்க் கவிஞர் பாரதிக்காக இருக்கை அமைத்து தமிழகத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார். சிறந்த ஆட்சியினை பிரதமர் நரேந்திர மோடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்” என்றார்.